ஊருணி ஆக்கிரமிப்பில் இருந்த தென்னை மரங்கள்…ஜேசிபி மூலம் வேரோடு அகற்றிய அதிகாரிகள்: தடுக்க முடியாமல் கதறிய பெண்கள்..!!

Author: Rajesh
27 March 2022, 6:14 pm
Quick Share

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ஊருணி ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்த முடியாமல் பெண்கள் கதறி அழுதனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியாத்தாள் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, பெரியாத்தாள் ஊருணி பகுதியில் பொதுப்பணி மற்றும் வருவாய்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மொத்தம் 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஊருணியில் 61 ஏக்கரை ஆக்கிரமித்து உள்ளூர் மக்கள் சிலர் விவசாயம் செய்து வருவது தெரியவந்தது. அதனைத் தொர்ந்து கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி தலைமையில், 4 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அங்குள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், எதுவும் செய்ய முடியாத நிலையில் பெண் ஒருவர் கதறி அழுதாஙர. ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதைவிட, அரசே அவற்றை பராமரிக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதை தவிர்த்து இதுநாள் வரை கஷ்டப்பட்டு வளர்ந்த மரங்களை வேரோடு சாய்ப்பது மனதை உலுக்குவதாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். பல வருடங்களாக பிள்ளை போல் வளர்ந்த மரங்களை வேரோடு அகற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 711

0

0