திமுக பிரமுகரை கொலை செய்த இளைஞர் பிணையில் விடுதலை : ஒரு வாரத்தில் நடந்த பழிக்கு பழி… திருவாரூர் அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 2:13 pm
Youth murder - Updatenews360
Quick Share

நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமினில் வந்து  ஒருவாரம் ஆன நிலையில் இளைஞர் வெட்டிப் படுகொலை. 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் 28 வயதான சந்தோஷ் குமார் என்பவர் கொலை வழக்கில் 2 மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டு ஒரு வாரத்திற்கு முன்பு பிணையில் வெளியில் வந்துள்ளார். 

இந்த நிலையில் சந்தோஷ்குமார் தனது வீட்டிலிருந்து கடைத் தெருவிற்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தோஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் சந்தோஷ்குமாரின் தலையில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சந்தோஷ் குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை சந்தோஷ் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது.

இந்த கொலை வழக்கில் கணேசன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறையில் இருந்து வந்து ஒரு வாரத்திற்குள் சந்தோஷ்குமார் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்கிற அடிப்படையில் எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சந்தோஷ் குமாரின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். 

Views: - 804

0

0