ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளிக்கு சென்ற LKG மாணவன் பலி.. ஓட்டுநர் போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டியதால் நிகழ்ந்த விபரீதம்..!!

Author: Babu Lakshmanan
27 June 2022, 6:37 pm
Quick Share

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எல்கேஜி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம் தோறும் பள்ளி மாணவ மாணவிகளை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ ஒன்று அனவரதநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் திடிரென்று கவிழ்ந்தது.

இதில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகி 7 பேரும் காயமடைந்தனர்.

உடனே இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Views: - 541

0

0