தூத்துக்குடியில் கொட்டி தீர்க்கும் மழை; குளம் போல மாறிய அரசு மருத்துவமனை… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

Author: Babu Lakshmanan
18 December 2023, 8:29 am
Quick Share

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே, தூத்துக்குடியின் பிரதான சாலைகளான தமிழ் சாலை ரோடு, வஉசி சாலை, கடற்கரை சாலை, லூர்தம்மாள் புரம், இந்திரா நகர், நிகிலேஷ் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சில வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்துள்ளது. மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை வாயிலில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிலையங்களுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாகவும், உயர்கல்வி வகுப்புகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்றும், மேலும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்திற்கு வரும் சென்னை – தூத்துக்குடி விமானம், பெங்களுரில் இருந்து தூத்துக்குடி வர கூடிய விமானம் மதுரையில் தரை இறக்கப்பட்டது.

பின்னர், மாலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வர கூடிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடியில், 5,000 நாட்டு படகுகள், 250 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Views: - 164

0

0