நடுரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய என்ஜினியர் குடும்பம்…!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 11:01 am

தூத்துக்குடியில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த கார் தீடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அபிராமி நகர் பகுதியை சார்ந்த சிவில் இன்ஜினியர் இளங்கோ என்பவர் தனது குடும்பத்தினருடன் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு காரில் சென்றார். பின்னர், அங்கிருந்து தூத்துக்குடி பீச் ரோட்டில் புதுப்பொலிவுடன் உள்ள முத்துநகர் கடற்கரைக்கு செல்ல தனது குடும்பத்தினருடன் சவுத் காட்டன் ரோடு பகுதியில் காரில் வந்துள்ளார்.

அப்போது, காரின் எதிர்புறம் வந்த பொதுமக்கள் காரில் இருந்து தீப்பொறி வருவதாக கூறியவுடன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவரும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்துக்கொண்டு காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதற்குள் கார் எஞ்சின் பகுதியில் தீ மளமளவென்று பரவவே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தும் அணையாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதற்குள் கார் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

  • sikandar movie producer decided to claim 90 crores in insurance 90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?