டிராக்டர் மீது கார் மோதி விபத்தில் மகன், மகள் பலி ; கணவன், மனைவிக்கு கால்முறிவு… பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பிய போது சோகம்!!

Author: Babu Lakshmanan
17 January 2024, 7:53 pm
Quick Share

சோழவரம் அருகே பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பி வரும் வழியில் நிகழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளரின் மகன் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மீஞ்சூர் வண்டலூர் சாலையில் தனது புதிய டாட்டா சபாரி காரில் பொங்கல் விழாவிற்காக பழனிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு மீண்டும் மீஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, முன்னாள் சென்ற டிராக்டரை இடித்ததன் காரணமாக தலைக்குப்புற கவிழ்ந்த காரில் இருந்த கணவன், மனைவிக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. அவரது மகள் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழுந்தார்

மீஞ்சூரில் வேலவன் ஏஜென்சி என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் சண்முகம் (42), மகேஸ்வரி (36). இவர்களுக்கு வர்ஷா (19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்புக்கு படித்துக் கொண்டிருக்கிறார். மகன் வர்ணிஷ் (15) கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

மகேஸ்வரிதான் காரை ஓட்டுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் புதிய டாட்டா சபாரி கார் வாங்கியதாக தெரிகிறது. அதில் இவர்கள் பொங்கல் அன்று பொங்கலை கொண்டாடிவிட்டு பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக மீஞ்சூரில் இருந்து தங்களின் காரில் சென்றதாக தெரிகிறது.

வரும் வழியில் சொந்த ஊருக்கு சென்று விட்டு இவர்கள் மீஞ்சூரை நோக்கி வரும்பொழுது, மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, முன்னாள் சென்ற டிராக்டரை சரியான முறையில் கவனிக்காத காரணத்தால், அதன் பின்னால் கார் இடித்ததாக தெரிகிறது.

உடனடியாக கார் பலமுறை தலைகுப்புற விழுந்த நிலையில், டிராக்டர் வேறொரு திசையில் விழுந்துள்ளது. இதில், டிராக்டர் டிரைவருக்கு காயங்கள் ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காரை ஓட்டிய மகேஸ்வரிக்கும், கணவருக்கும் கை கால்களில் காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் முதலில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் விபத்தில் சண்முகத்தின் மகன் மற்றும் மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் மீஞ்சூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Views: - 1557

0

0