கோவை – மதுரை செல்லும் ரயிலில் வெடிகுண்டு மிரட்டல் : பகீர் கிளப்பிய நபர் கைது… விசாரணையில் போலீசார் அப்செட்..!

Author: Babu Lakshmanan
12 January 2023, 11:59 am
Quick Share

கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிக்கப் போவதாக பொய்யான தகவலை பரப்பிய நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 09 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மதுரை இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு மாநில காவல் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கிடைத்த தகவல்படி அக்குறிப்பிட்ட ரயில் மதுரை வந்ததும் வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது.

வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக மதுரை இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பொய்யாக தகவல் தெரிவித்தவர் பயன்படுத்திய செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் அந்த நபர் மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளளூரை சேர்ந்த சேகர் மகன் போஸ் (35) என தெரிய வந்தது.

இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அதே ரயிலில் பயணம் செய்து வந்ததாகவும் தன்னோடு அருகில் அமர்ந்து பயணம் செய்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், போலீஸ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பரபரப்பையும், பீதியையும் மற்றும் பயத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு ஒரு பொய்யான தகவலை அவசர போலீஸ் அழைப்பு எண் 100 மூலம் சொன்னது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் புரளி கிளப்பிய அந்த நபர், மேலுரில் வைத்து மதுரை இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் M. குருசாமி உதவி ஆய்வாளர் முத்து முணியான்டி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 419

0

0