பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு மஞ்சளையும் கொடுங்க ; தமிழக அரசுக்கு மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 11:48 am
Quick Share

பொங்கல் பரிசு தொகுப்புடன் குலையுடன் கூடிய மஞ்சளையும் சேர்த்து வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என மஞ்சள் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையின் போது புதுப்பானையில் பொங்கலிடும் போது மஞ்சள் குலை, கரும்பு ஆகியவற்றை படைத்து மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையில் முக்கிய அங்கம் வகிக்கும் மஞ்சள் குலையை தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம், செவத்தையாபரம், சிவஞானபுரம், சக்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதியில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதையொட்டி, கடந்த ஜீலை மாதம் விதைத்த மஞ்சள் ஐந்து மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வளர்ந்து நல்ல விளைச்சல் அடைந்து அறுவடை நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்யபட்ட மஞ்சள் முதல் கட்டமாக மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து விமானம் மூலம் கனடா, லன்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக அறுவடை செய்த மஞ்சள் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கும், தூத்துக்குடி, நெல்லை, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பண்டிகையின் முக்கியமான குலையுடன் கூடிய மஞ்சளையும் சேர்த்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Views: - 360

0

0