14 அடியில் தேங்காயின் உள்ளே விநாயகர்… மலைக்கோட்டை கோவிலில் பிரமாண்ட கொழுக்கட்டை… பக்தர்களின் கவனம்பெற்ற சதுர்த்தி..!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 2:05 pm
Quick Share

தமிழகத்தில் வேறு எங்கும் காணாத வகையில் சேலத்தில் பத்தாயிரம் தேங்காயுடன் தென்னந்தோப்புக்குள் நடுவே வடிவமைக்கப்பட்ட 14 அடி உயரத்தில் தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மகா கணபதி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முழுமுதற் கடவுள் விநாயகர் பெருமான் அந்த விநாயகர் பெருமாள் வேண்டியதை வேண்டியபடி தந்தருளும், விநாயகருக்கு ஆண்டுதோறும் பக்தர்களால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இல்லங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் ஸ்ரீ வாசவி கல்யாண மண்டபத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். குறிப்பாக, அமர்நாத் குகையில் விநாயகர் வீற்றிருப்பதை போன்றும் கண்ணாடி மாளிகையில் விநாயகர் அமர்ந்திருப்பதை போன்றும் கைலாயத்தில் கணபதி குடியிருப்பது போன்றும் அவ்வைக்கு மோட்சம் கொடுத்த விநாயகப் பெருமான் போன்றும் தச அவதாரத்தில் விநாயகர் என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 43 வது ஆண்டாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தென்னந்தோப்புகள் அமைக்கப்பட்டு, பத்தாயிரம் தேங்காய்களை கொண்டும் குறிப்பாக 14 அடியில் தேங்காயை உருவாக்கப்பட்டு, தேங்காய் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மஹா கணபதி காட்சி தருவதைப் போல வடிவமைத்திருந்தனர். இந்த தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர மஹா கணபதியை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.

இது குறித்து எலைட் அசோசியேசன் நிர்வாகி சுவாதி சேகர் கூறும் போது ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு வடிவங்களில் விநாயகரை வடிவமைக்கிறோம். இந்த ஆண்டு தென்னந்தோப்புக்குள் தேங்காயின் உள்ளே ஸ்ரீ பூரண நாளிகேர கணபதியை வடிவமைத்துள்ளோம். இதற்காக கடந்த ஒரு வாரமாக மண்டபத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு மண்டபம் முழுவதும் தென்னந்தோப்பு உருவாக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் நடக்கும் பாதை முதற்கொண்டு விநாயகரை காண செல்லும் வழி முழுவதும் தேங்காய் நார் மற்றும் தேங்காய் துகள்கள் போன்றவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

தேங்காயில் கணபதி இருப்பதை போன்று வடிவப்பதன் நோக்கம் முக்கண்ணின் அம்சமாக இருக்கக்கூடியவர் சிவபெருமான், அவருடைய மகனான கணபதியை தேங்காயில் வடிவமைக்க வேண்டும் என நினைத்து செய்யப்பட்டது என்றும், எந்த சுப காரியங்கள் செய்தாலும் அதற்கு முக்கிய காரணமாக தேங்காய் இருக்கிறது. எனவே தேங்காயை மையமாக வைத்து இந்த வருடம் விநாயகர் வடிவமைக்கப்பட்டது, என தெரிவித்தார். பக்தர்களின் வசதிக்காக நாளை முதல் மூன்று நாட்கள் இருக்கும் என்றும் கூறினார்.

இதேபோல, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் பிரம்மாண்டமான கொழுக்கட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ, உச்சி விநாயகர் சன்னதியில் 75 கிலோ 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது..

மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும். இன்று தொடங்கி 14 தினங்கள் நடைபெறும். திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் ,மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தன‌காப்பு அலங்காரம் நடைபெறும்.

மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவிஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது.

திருச்சி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

Views: - 338

0

0