பேராசிரியர் வீடு உள்பட அடுத்தடுத்த தெருக்களில் கொள்ளை சம்பவம்… திருடர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
22 July 2022, 3:49 pm
Quick Share

விருதுநகரில் அடுத்தடுத்த தெருக்களில் நடந்தேறிய கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் நேரு தெருவில் வசித்து வருபவர் வேல் சித்ரா. இவருடைய கணவர் தங்கராஜ் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பாண்டிச்சேரியில் பணிபுரிந்து வருகிறார். வேல் சித்ரா அவருடைய மகளின் கண் சிகிச்சைக்காக 10 நாட்களாக மதுரை சென்றதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை வீடு திரும்பிய வேல் சித்ரா வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஊரக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் அங்கு வந்த ஊரக காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்ததில், பீரோவை உடைத்து ஐந்து பவுன் நகை மற்றும் 6000 ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.

இதே போல், கம்பர் தெருவில் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ராஜா என்பவர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஒரே நாளில் நடைபெற்ற அடுத்தடுத்து பகுதிகளில் நடந்தேறிய கொள்ளை சம்பவங்கள் குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றன. மேலும் இச்சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 502

0

0