முகநூல் மூலம் காதல் வலை.. 15 வாலிபர்களை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான பெண்.. அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 8:01 pm

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி.

இவர் பேஸ்புக்கில் தனது நண்பர்கள் ஏராளமானவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். அப்போது அருள்ராஜிக்கு வேலூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

அப்போது அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று பகிர்ந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திருமணம் செய்தார்.

ஆரம்பத்தில் இவர்கள் வாழ்க்கை இனிதாக சென்றது. அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும்போது வெளியூர்களில் தங்குவது வழக்கம். அப்போது அந்த பெண் அருள்ராஜிடம் தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்வார். இதுபோன்று அடிக்கடி நடந்தது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் தனது தங்கை திருமணத்துக்காக 7 சவரன் நகை, 90 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை வாங்கி வைத்திருந்தார். இந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ் மனைவி, திருமணத்துக்கு வைத்திருந்த நகை, பணத்துடன் திடீரென மாயமானார். நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் அந்த பெண் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது அது போலியானது என தெரியவந்தது.

அவர் வழங்கிய செல்போன் எண்ணும் வேறு நபருக்கு உரியது. அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…