எங்க சம்பளமெல்லாம் அரசினர் விருந்தினர் மாளிகைக்கே போகுது : நீதி வேண்டி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan23 பிப்ரவரி 2022, 7:12 மணி
கோவை : கோவையில் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு தங்கள் சம்பளத்தை செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோவை மாவட்ட வருவாய் நிர்வாகத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகுந்த முகாந்திரம் இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், நியாயமற்ற காரணங்களுக்காக விளக்கம் கேட்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
ஆய்வுக் கூட்டங்களில் கடுமையாக நடந்து கொள்வது கோப்புகளில் கையொப்பம் இடுவதற்கு நீண்ட நேரம் காக்க வைப்பது கோப்புகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை மாவட்ட வருவாய் அலுவலர் நிறுத்த வேண்டும்.
அரசு விருந்தினர் மாளிகைகளில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது மேற்கொள்ளப்படும் செலவினங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து கூறிய அவர்கள், அரசு விருந்தினர் மாளிகைக்கு முக்கிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுக்கான செலவுகளை அலுவலர்கள் தங்களது சம்பளத்தை கொண்டு செலவிடுவதாக தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் அலுவலர் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் கோப்புகளில் கையொப்பம் பெற சென்றால் நீண்ட நேரம் காக்க வைப்பதாகவும் சில நேரங்களில் கோப்புகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்வதாகவும் தெரிவித்தனர்.
மேலும் நியாமற்ற காரணங்களுக்காக வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்கும் பொழுது அது குறித்து விளக்கம் கேட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். முகாந்திரம் இல்லாமல் துணை வட்டாட்சியர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் இவற்றை எல்லாம் குறித்து வெள்ளிக்கிழமை அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் மேற்கொண்டு தங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் திங்கட்கிழமை முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
0
0