அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan20 June 2025, 4:56 pm
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம் பரப்பப்பட்டது.
இது கண்டனத்திற்குரியது என்றும் இதை செய்த அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட திமுக ஐடி வின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் ஆறு புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சாதுமிரண்டால் காடு கொள்ளாது அதிமுகவை சீண்டி பார்க்க வேண்டாம்.சீண்டி பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்.
மருத்துவ பணியாளர்கள் தேர்வாணை என்பது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருடத்திற்கு நான்காயிரம் பணியிடங்கள் எம்ஆர்பி மூலமாக வெளிப்படை தன்மையோடு பணி நிரப்பப்பட்டது.
ஆனால் திமுக நான்காண்டு கால ஆட்சியில் நான்காயிரம் பேர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை சுகாதாரத் துறை அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் .
தமிழக சுகாதாரத் துறை தற்போது மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருந்து கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு முதலமைச்சராக தமிழகத்தை ஆளப்போகும் எடப்பாடி மீது அவதூறு கார்ட்டூன் வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
26 தேர்தல் வரும் நிலையில் இது போன்று எதிர்க்கட்சியை தலைவர்களை விமர்சனம் செய்வது என்பது திமுகவிற்கு நல்லதல்ல மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். சரியான பாடத்தை 26 ஆம் ஆண்டு கொடுப்பார்கள் 26 தேர்தலை மனதில் கொண்டாவது இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழடி விவகாரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன இதை மடை மாற்றி கீழடி விவகாரத்தை திமுக தான் செய்தது போன்று பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.