கண்ணை மறைத்த கள்ளக்காதல்… கட்டிய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்துக் கொன்ற மனைவி கைது..!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 1:42 pm
Quick Share

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்து அறுத்துக் கொன்ற மனைவியை போலீவார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம் அருகே பேரூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (36). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கனகலட்சுமி என்பவருடன் திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர்.மேலும், கருப்பசாமி லாரிக்கு சென்று விட்டு, கடந்த 7ம் தேதி காலையில் தான் வீட்டிற்கு வந்துள்ளார்.

அன்றைய இரவு வீட்டின் வராண்டா பகுதியில் கருப்பசாமி உறங்கியுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் கருப்பசாமி கழுத்தை அறுத்து, நெஞ்சுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கருப்பசாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை செய்து, ஏஎஸ்பி சந்தீஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

மேலும் போலீசார் கனகலட்சுமி இடம் துருவித் துருவி விசாரித்தனர். அதனடிப்படையில், இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் அருகில் உள்ள சோழபுரத்தை சேர்ந்த அய்யாபிள்ளை மகன் ரவிச்சந்திரன் (36) என்பவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரவிச்சந்திரன், கருப்பசாமியை அவரது மனைவியின் உதவியுடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் கருப்பசாமி அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவியான கனகலட்சுமியை அவரது சித்தப்பா மகளை திருமணம் செய்த ரவிச்சந்திரன் என்பவருடன் சேர்த்து பேசி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கனகலட்சுமிக்கும் ரவிசந்திரனுக்கும் இடையே சுமார் ஓராண்டுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நாளடைவில் கள்ளக்காதலர்கள் கருப்பசாமியை தீர்த்துக் கட்டினால்தான், நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றும், எனவே சந்தர்ப்பம் வரும்போது தீர்த்து கட்டிவிடலாம் என திட்டம் போட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த 7ம் தேதியன்று காலையில் கருப்பசாமி வண்டிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, கனகலட்சுமி அன்று மாலையில் சுமார் 4 மணி அளவில் ரவிச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு பேரூரணி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, சுமார் இரவு 10 மணி அளவில் ரவிச்சந்திரன் பேரூரணி காட்டுப்பகுதியில் மது குடித்துவிட்டு 12 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் கருப்பசாமியின் வீட்டிற்கு முன்பாக வண்டியை நிறுத்திவிட்டு, தகரக்கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

பின்னர், கனகலட்சுமியும், ரவிச்சந்திரனும் சேர்ந்து வீட்டின் முன்பாக வராண்டாவில் படுத்து இருந்த கருப்பசாமியை கழுத்தை அறுத்த பிறகு, நெஞ்சு பகுதி உள்ளிட்ட பகுதியில் கத்தியால் குத்திய போது, தப்பி ஓட முயற்சித்த கருப்பசாமி வீட்டின் வெளிப்பகுதியில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலீசாரின் தீவிர விசாரணையில் கனகலட்சுமி, ரவி சந்திரன் இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்ததையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர் . தாலி கட்டிய கணவனை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 919

0

0