2 நிமிடம் காத்திருக்க சொன்ன விவசாயி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : காவலர் மற்றம் ராணுவ வீரர் மீது பாயுமா வழக்கு? போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 1:31 pm
Farmer Attack - Updatenews360
Quick Share

மதுரை : விவசாயியை தாக்கிய சிறைக்காவலர் மற்றும் இந்திய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 38). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக குடும்பத்துடன் ஆட்டோவில் வந்தார். அப்போது காளவாசல் திருமண மண்டப வாயிலில் பாண்டி குடும்பத்தினர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினர்.

அப்போது ஆட்டோவின் பின்புறம் வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் இருந்தனர். அவர்கள் பலத்த சத்தத்துடன் ‘ஹாரன்’ அடித்தவாறு இருந்ததை அடுத்து பாண்டி ‘சிறிது நேரம் பொறுங்கள். நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி கொள்கிறோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

இதனிடையே 2 தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஆத்திரம் அடைந்த நிலையில் பாண்டியை சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது பாண்டியை தாக்கியது திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 25) மற்றும் ஹார்விபட்டி பாலாஜி (வயது 25) என்பது தெரியவந்தது. இவர்களில் பார்த்தசாரதி மதுரை மத்திய ஜெயிலில் சிறைக்காவலராக வேலை பார்த்து வருகிறார். பாலாஜி ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் பாண்டியை தாக்கியதாக பார்த்தசாரதி, பாலாஜி ஆகிய 2 பேரிடமும் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 553

0

0