அக்காவை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அடித்தே கொன்ற தம்பி… அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
11 May 2022, 4:02 pm
Quick Share

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, அவரது சகோதரர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சென்னன். இவரது சகோதரி உமா நேற்று அவரது ஊருக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவன் உமாவை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று தாக்கி பாலியல் தொந்தரவு செய்ய முயற்சி செய்துள்ளான்.

அப்போது அந்தப் பெண் உடனே கூச்சலிடவே கிராமத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ராஜேஷை பிடிக்க முயற்சித்தனர். அப்போது, மதுபோதையில் இருந்த ராஜேஷ், அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். காயமடைந்த உமாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ராஜேஷ் சென்றுள்ளான். இதனை பார்த்த உமாவின் தம்பி சென்னன், ஆத்திரமடைந்து அங்கிருந்த இரும்பு ராடால் ராஜேஷ் மண்டையை தாக்கினார். அப்போது, ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷை மருத்துவ ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, தருமபுரி நகர காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை செய்து, சென்னனை கைது செய்தனர். மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இருவரை தேடி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் மத்தியில் அக்காவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, தம்பி இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 810

0

0