தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதி : பாஜகவை வளர விடாமல் நடக்கும் சதி.. டெல்லி குழு அளித்த புகாரில் பரபர!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2023, 9:46 pm
TN Bjp - Updatenews360
Quick Share

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதி : பாஜகவை வளர விடாமல் நடக்கும் சதி.. டெல்லி குழு அளித்த புகாரில் பரபர!!

திமுக அரசால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கில் வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுவது குறித்து ஆய்வு செய்ய டெல்லி பாஜக மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, எம்.பிக்கள் சத்யபால் சிங், பி.சி.மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், 4 பேர் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்று, தமிழக காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பாஜகவினரிடம் விசாரித்து, விவரங்களைக் கேட்டனர்.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சதானந்த கவுடா, புரந்தேஸ்வரி, சத்யபால் சிங், பி.சி.மோகன், சுதாகர் ரெட்டி, எஸ்.ஜி.சூர்யா, டால்பின் ஸ்ரீதர் ஆகியோர், திமுக அரசு, பாஜகவினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் ஆளுநரிடம் புகார் மனுவை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, சதானந்த கவுடா தலைமையிலான நால்வர் குழுவினர், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சதானந்த கவுடா, திமுக அரசு, காவல்துறை மூலம் பாஜகவினருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், இதுபற்றிய புகாரை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய புரந்தேஸ்வரி, “ஏதாவது பதிவை பகிர்ந்தாலே பாஜகவினர் மீது வழக்கு பதியப்படுகிறது. எந்த அடிப்படையும் இன்றி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு போடப்படுகிறது. பாஜக தமிழ்நாட்டில் வளர்வதால் அரசு பயந்து பாஜகவினரை குறி வைக்கிறது. பொய் வழக்கு பதிவு செய்வதால் பாஜகவை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் ஒரு மாதம் வெளியே வர முடியவில்லை.

சனிக்கிழமை மாலை அமர் பிரசாத் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அமர் பிரசாத் ரெட்டி துணியை மாற்றிக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. தங்கள் முன்பே துணியை மாற்றிக்கொள்ளுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவரை உடனடியாக கூட்டிச் சென்றுள்ளனர். மாலை நேரத்தில் கைது செய்ததால் அவரால் ஜாமீன் கோரக்கூட முடியவில்லை.

அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பாஜகவின் பாதயாத்திரை சிறப்பாக நடந்து, மக்கள் கூட்டம் திரண்டு வருவதால் பாதயாத்திரையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அமர் பிரசாத்தை கைது செய்துள்ளனர்.

பாஜகவினர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பதிவு செய்து உடனே சிறையில் போட்டு விடுகின்றனர். ஆனால், பாஜக தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும் கொடுமை நடந்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றால், புகாரை ஏற்கவோ, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ போலீசார் முன்வரவில்லை. பாஜகவினர் கட்சிப் பணியாற்றக் கூடாது என்பதற்காகவே பாஜகவினரை குறிவைக்கின்றனர்.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Views: - 203

0

0