நடிகை த்ரிஷா விவகாரம் … காவல்துறைக்கு திடீரென கடிதம் எழுதிய மன்சூர் அலிகான் ; கோரிக்கையை ஏற்ற காவல்துறை..!!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 1:04 pm
trisha mansoor ali khan
Quick Share

மன்சூர் அலிகானின் கோரிக்கையை ஏற்ற காவல்துறை, நாளை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராக அனுமதி வழங்கியுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு நடிகை த்ரிஷா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. அதன்பேரில் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று காலை 10 மணி அளவில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், உடல் நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கடந்த 15 நாட்களாக தொடர் இருமல் இருந்து வருவதாகவும், நேற்று மிகவும் பாதிப்படைந்து பேச மிகச்சிரமமாக இருப்பதால் சிகிச்சையில் இருப்பதாக கூறியுள்ளார். எனவே, நாளை தங்களை சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வருகிறேன் என்றும் அந்தக் கடிதத்தில் நடிகர் மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார்.

மன்சூர் அலிகானின் இந்தக் கோரிக்கையை ஏற்ற காவல்துறை, நாளை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராக காலஅவகாசம் கொடுத்துள்ளனர்.

Views: - 164

0

0