‘இங்கே இருக்கேன்.. நான் தான்-மா விஜய்’… மேடையில் பதற்றமான மூதாட்டி… டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்… டக்கென விஜய் கொடுத்த ரியாக்ஷன்!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 4:28 pm
Quick Share

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.

ஐதராபாத்தில் 68வது பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை திரும்பினார். விஜயகாந்த் உடலுக்கு நேற்றைய தினமே அஞ்சலி செலுத்திய அவர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், நெல்லையில் உள்ள கேடிசி நகரில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூட்டம் அலைமோதியது. பலர் மண்டபத்தின் சுவரை எகிறி குதித்து உள்ளே சென்றனர்.

இந்த நிலையில், மண்டபத்தின் உள்ளே சென்ற நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். பின்னர், அவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், இந்த மழை, வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25000 ரொக்கம் கொடுத்து உதவினார்.

அனைத்து நிவாரணப் பொருட்களையும் தனது கையாலயே மக்களுக்கு வழங்கினார். இந்த சூழலில், நிவாரணப் பொருட்களை வாங்க வந்த மூதாட்டி ஒருவர், நடிகர் விஜயை கவனிக்காமல், செய்வதறியாது மேடையில் நின்றிருந்தவர்களை வணங்கியபடி, நிவாரணப் பொருட்களை வாங்க மறந்து போனார்.

அப்போது, ‘அம்மா அம்மா நான் இங்கே இருக்கேன்’ என நடிகர் விஜய் கூப்பிட்டார். இதனைக் கேட்டு அவர் பக்கம் சென்ற மூதாட்டியிடம், ‘நான் தான் விஜய்’ என்பதைப் போல கையை வைத்து காண்பித்தார். பின்னர், நிவாரணப் பொருட்களை வாங்கிய அந்த மூதாட்டியிடம் இருந்து, எடை அதிகமாக இருந்ததால் நிவாரணப் பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

இருப்பினும், அந்த இடத்தை விட்டு நகராத அந்த மூதாட்டி, விஜய்யின் கண்ணத்தை பிடித்து கொஞ்சினார். ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த புஸ்ஸி ஆனந்த், அந்தப் பக்கம் போ என்று கோபமாக கூறினார். இதனை பார்த்த நடிகர் விஜய், பொறுமை, பொறுமை… நான் பார்த்துக் கொள்கிறேன். என்பதைப் போல செய்கை காண்பித்தார். இதனால், புஸ்ஸி ஆனந்த்தும் கூலானார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

Views: - 337

0

0