‘சொன்னது நீ தானா? சொல்…சொல்’… தமிழகத்தில் ரூ.42,768 கோடிக்கு அதானி முதலீடு ; திமுக குறித்து பாஜக கடும் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 7:58 pm

சென்னை ; தமிழகத்தில் அதானி ரூ.42,768 கோடிக்கு முதலீடு செய்த நிலையில், திமுகவை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தள்ளது.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக, கடந்த இரண்டு நாட்களில் ரூ.6.6 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக, அதன் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன் வாயிலாக 26 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், 14 இலட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பில் பலன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதானி குழுமம் ரூ.42,768 கோடி முதலீடு செய்யவுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிமெண்ட் உற்பத்தி என பல துறைகளில் செய்யும் முதலீடுகள் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் 10,300 பேருக்கு அதானி குழுமம் நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது.

அதானி பசுமை ஆற்றல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவு சார்பில் ரூ.24,500 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதன் வாயிலாக 4 ஆயிரம் பேருக்கு அதானியின் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். அம்புஜா சிமெண்ட்ஸ் பிரிவு சார்பில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்பட்டு, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். அதானி கனெக்ஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ரூ.13,200 கோடி முதலீடு செய்யப்பட்டு, ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எரிவாயு மற்றும் சிஎன்ஜி பிரிவில் ரூ.1,568 கோடி முதலீடு செய்யப்பட்டு, 300 பேருக்கு அதானி நிறுவனத்தின் சார்பில் வேலை வழங்கப்படும். இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மத்திய அரசின் முதலீடுகளில் அதானி பங்கெடுத்திருப்பதை விமர்சிக்கும் விதமாக, திமுகவும், காங்கிரசும் அதானியையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்ற வரை இந்த விவகாரம் எதிரொலித்தது. குறிப்பாக, திருச்சி விமான நிலைய விரிவாக்கம் கூட அதானிக்காகத் தான் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. மேலும், அதானி மீது முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக அமைச்சர்களே ஊழல் குற்றம்சாட்டி வந்தனர்.

இப்படியிருக்கையில், தமிழகத்தில் அதானி ரூ.42,768 கோடி முதலீடு செய்ய தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பது குறித்து பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா…. சொன்னது நீ தானா? சொல்…சொல்…சொல்… அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ……

“இந்தியாவில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் நன்றாக வாழ்கிறது, அதுதான் அதானிகள்” உதயநிதி ஸ்டாலின், டிசம்பர் 2, 2023 அன்று உதகையில்.
“அதானி ஊழலால் இந்தியாவே தலை குனிந்து நிற்கிறது” – 12/06/2023 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“அதானி குழுமம் மீது வலுவான வாதங்களை முன் வையுங்கள்” – 29, ஜனவரி,2023 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பாஜக அரசின் மீதான நேரடிக் குற்றச்சாட்டுக்கள்” – 14, பிப்ரவரி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்.

“தி மு க ஆட்சிக்கு வந்தால் அதானி துறைமுக விரிவாக்கத்தை ரத்து செய்வோம்” – மார்ச் 13,2021 அன்று தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின்.
“மோடி அதானிக்காக வேலை செய்யும் போது திமுக தமிழகம் முழுவதற்கும் வேலை செய்கிறது” :-உதயநிதி ஸ்டாலின்.
“கமுதி பகுதியில் விவசாயிகளை மிரட்டி விளை நிலங்களை அபகரிக்கும் அதானி குழுமத்தினரை தடுத்து நிறுத்துவோம்” :- 30,அக்டோபர் 2017 அன்று தி.மு.க. தலைவர், மு.க.ஸ்டாலின்.
“அதானி நிறுவனத்துடன் இணைந்து அ தி மு க அரசு ரூபாய்.23000 கோடி கொள்ளை” :- 7, மே, 2016 அன்று தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின்.
“அதானிக்காக தமிழக நலன் தாரை வார்ப்பு” :- 13, ஜனவரி அன்று தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின், என்று அதானி குறித்து திமுகவினர் பேசிய பேச்சுக்களை பட்டியலிட்டுள்ளார்.

தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளபடி அனைத்து முதலீடுகளையயும் எக்காரணம் கொண்டும் வேறு எந்த மாநிலத்திற்கும் செல்லாதபடி செயல்படவும். மாநில நலன் காக்க, பொருளாதாரம் செழிக்க எங்களின் முழு ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு, என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?