மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்… என்றுமே நம்பர் ஒன் இபிஎஸ் தான் ; ஆர்பி உதயகுமார் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
27 June 2023, 10:55 am
Quick Share

உலக அளவில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக அதிமுகவை 7வது இடத்திற்கு கொண்டு சென்று தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பெருமை சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- உலக அளவிலான அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் எண்ணிக்கை குறித்து, ரேங்க் வேர்ல்ட் அப்டேட் என்கிற நிறுவனத்தில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் பாரதிய ஜனதா கட்சி, 2வது இடத்திலே சைனீஸ் கம்யூனிஸ்ட் பார்ட்டி, 3வது இடத்தில் டெமாக்ரடிக் பார்ட்டி, 4வது இடத்திலே இந்தியன் நேஷனல் காங்கிரஸ், 5வது இடத்தில் ரிபப்ளிக் கட்சி 6வது இடத்தில் ஜஸ்டின் டெவலப்மெண்ட் பார்ட்டி, உலக அளவில் 7வது இடத்திலே எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இடம்பிடித்து, இந்திய அளவிலே மூன்றாவது இடத்தில் பெற்றிருப்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய கட்சி எது என்று பார்க்கிற போது இன்றைக்கு பெரிய கட்சிகளும், லெட்டர்பேடு கட்சிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கட்சிகள் இருக்கிறது. எடப்பாடியாரின் தலைமையில் உள்ள அஇஅதிமுக 7வது இடத்தை பிடித்தது என்பது எல்லோருக்கும் புதிய உற்சாகத்தையும், புதிய உத்வேகத்தையும், புதிய ஆற்றலையும் இன்றைக்கு தந்திருக்கிறது. 

இன்றைக்கு தொண்டர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே பொதுமக்களும், மாணவர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும், தாய்மார்களும் இன்றைக்கு தன் எழுச்சியாக தங்களை தொண்டர்களாக இணைத்துக் கொள்கிறார்கள் என்பது எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் திமுக 15 இடத்தை கூட இடம் பிடிக்கவில்லை.

சமீபத்தில் யார் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சர்வேயில் எடப்பாடியாரின் ஆட்சியையும், ஸ்டாலின் ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து அதில் எடப்பாடியார் ஆட்சி சிறப்பாக இருந்தது என்று 53 சதவீதம் பேரும், ஸ்டாலின் ஆட்சிக்கு வெறும் 42 சதவீதம் தான் சிறப்பாக இருந்தது என்று கூறி உள்ளனர்.

எடப்பாடியார் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி பிரச்சினைக்கு தீர்வு, 2 கோடி 18 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு, ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கம் என அவர் முதலமைச்சராக இருந்த போது, இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சேவை தான் இன்றைக்கு மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும் என்பதை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகிறது. 

கட்சியில் இன்றைக்கு பல்வேறு சோதனைகள், துரோகங்களுக்கு மத்தியிலே அதை மீட்டெடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அது ஒரு மிகப்பெரிய சவாலான காரியம். புரட்சித்தலைவர் ஆன்மா, அம்மாவின் ஆன்மா அவரிடம்  இருப்பதால் தான் வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார். திமுக அரசு திட்டங்களை அறிவிக்கிறது தவிர அதை செயல்படுத்துவதில் 100 சதவீதம் தோல்வி அடைந்துள்ளது.

மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தோல்வியடைந்து விட்டது. நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதில் தோல்வி அடைந்து விட்டார். 520 வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை, நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை, அரசுக்கு ஆலோசனை கூற குழுக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகிறது. ஆனால் அந்தக் குழுவும், கமிஷன் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இந்த அரசு பல்வேறு கழ்ப்புணர்ச்சியோடு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையோடு பல்வேறு கருத்துக்களை வெளியிடுகிறார்கள். இந்த சர்வே மூலம் திமுகவின் இந்த இரண்டு ஆண்டுகளில் பின்னடைவுகள், திட்டத்தினுடைய முடக்கங்கள், நிதி பற்றாக்குறை என்று மக்கள் நலத் திட்டங்களை முடக்குவது, ரத்து செய்வது, மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டங்களை ரத்து, தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் இந்த அரசின் மீது கடும் கோபம் என முதலமைச்சர் நம்பிக்கை இழந்து விட்டார். இது ஒருபுறம் இருந்தாலும் கூட அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சிகள் பட்டியலில் 15 இடத்தை கூட திமுக பிடிக்க முடியவில்லை.

அதிமுகவின் 51 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏழை,எளிய மக்களுக்கு திட்டங்களை செய்து மகத்தான சாதனை படைத்தது. இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண கிளைச் செயலாளராக இருந்து தன் உழைப்பால் கட்சியை சிறப்பாக வழி நடத்தி, உலக அளவில் அதிமுகவை ஏழாவது இடத்திற்கு கொண்டு போய் சேர்த்த எடப்பாடியாருக்கும், அவருக்கு உறு துணையாக இருந்த தொண்டருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகத் தமிழ் இனத்திற்கு பெருமையாகும், என கூறினார்.

Views: - 209

0

0