கோர்ட் வரை சென்ற நடிகை த்ரிஷா விவகாரம்… ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு… விழி பிதுங்கிய ஏவி ராஜு!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 5:23 pm
Quick Share

நடிகை த்ரிஷா விவகாரம் தொடர்பாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டு, ஏவி ராஜுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாச்சலம் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த எம்எல்ஏ வெங்கடாசலம், நடிகை திரிஷா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் என்றும், நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஏவி ராஜு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜுவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் பெப்சி சங்கமும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். கவனம் ஈப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கக் கூடிய நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகள் கூறியதாக , அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில் அவதூறு பேச்சால் நான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஏ.வி.ராஜுவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஏ.வி.ராஜு மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென தங்களது பொதுச்செயலாளர் ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு என்று பிரத்யேகமாக பெண்கள் ஆதரவு இருந்ததாகவும், ராஜூவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், ராஜூவின் பேச்சை நீக்க வேண்டுமென கூகுள் மற்றும் யூ டியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Views: - 167

0

0