இரட்டை இலை யாருக்கு..? நாளை வெளியாகிறது அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு ; பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் களம்..!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 9:24 pm
Quick Share

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வெளியிடுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் அதிரடி உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பும் எழுத்தப்பூர்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகும். மேலும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகும். அவ்வாறான தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் செல்வது உறுதியாகிவிடும்.

Views: - 411

0

0