தேதி குறித்த அண்ணாமலை.. அடுத்த வியூகம் என்ன? முக்கிய நிர்வாகிகளுடன் வெளியாகும் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 7:18 pm
eps vs bjp - Updatenews360
Quick Share

தேதி குறித்த அண்ணாமலை.. அடுத்த வியூகம் என்ன? முக்கிய நிர்வாகிகளுடன் வெளியாகும் அறிவிப்பு!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னணி தலைவர்கள், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக, பாஜகவுடனான தங்கள் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

ஏற்கெனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த, பாஜகவின் மாநிலத் தலைமை எங்கள் இயக்கத்தைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தால், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஊடக விவாதங்களில், நேரம் வரும்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துவிடும் என்று கூறி மக்களை திசைத்திருப்ப முயற்சித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், அதிமுக ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும்போது பாஜகவுடன் இணைந்து விடுவார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 3-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 236

0

0