அதை பற்றி கூட தெரியாத ஒரு தலைவரை வைச்சுட்டு உங்களுக்கு இது தேவையா? கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2023, 8:42 am
annamalai kani - Updatenews360
Quick Share

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரமானது தீவிரம் அடைந்துள்ளது.

பாஜக-காங்கிரஸ் கட்சிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது.

இந்தநிலையில் கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கும் வகையில் சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான கேஎஸ் ஈஸ்வரப்பா பங்கேற்றார். அப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரப்பா பாடிக்கொண்டிருந்த தமிழ்தாய் வாழ்த்து பாடலை கேட்டதும் தமிழ் பாட்டா நிறுத்து, நிறுத்து என கூறினார். இதனையடுத்து அடுத்த சில நொடிகளில் இந்த பாடல் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேடையில் இருந்த அண்ணாமலை எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்தார். இதனிடையே கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி, தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார் என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?

“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம் என பதிலடி கொடுத்துள்ளார்.

Views: - 293

0

0