தமிழகம் என்றும் ஆன்மீகத்திற்கான மண் : கருப்பு சட்டை விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு அண்ணாமலை பதிலடி..!

Author: Babu Lakshmanan
11 August 2022, 6:07 pm
Quick Share

கருப்பு சட்டை விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 5ம் தேதி விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 5ம் தேதி சிலர் கறுப்பு மேஜிக்கில் ஈடுபட்டதாகவும், கருப்பு ஆடை அணிந்து தங்கள் விரக்தியை போக்கலாம் என நினைக்கிறார்கள் எனக் கூறிய அவர், கருப்பு மேஜிக்கின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என்றும், கருப்பு மேஜிக், சூனியம், மாந்தரீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது எனத் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன் பங்கிற்கு கொடுத்த பதிலடியில், தந்தை ஈவெரா பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் கருப்புச் சட்டையை அணிந்ததாகவும், அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகக் கூறினார். மேலும், சனாதன தர்மத்தை நம்புவோரைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் பெரியார், என குறிப்பிட்டுள்ளார்.

ப.சிதம்பரத்தின் இந்தப் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “சனாதன தர்மத்தின் மீது உங்களின் ஆழ்ந்த வெறுப்பு புரிகிறது; அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் தமிழக மண், அனைத்து திசைகளிலிருந்து வரும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெரியார் உள்பட ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளுவர் என அனைத்து தரப்பின் கொள்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நடைமுறையில் என்ன இருக்கிறது என்பதே முக்கியம். தமிழகம் என்றென்றும் ஆன்மீகத்தின் உறைவிடமாக இருக்கும்!,” எனக் கூறினார்.

Views: - 458

0

0