விவசாயிகளிடம் CM ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அப்பாவி மக்களை பழி வாங்க மாட்டோம் என உறுதி கொடுக்கனும் ; அறப்போர் இயக்கம்..!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 12:45 pm
Quick Share

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை போட்ட முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை – செய்யாறில் சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. விளைநிலங்களை அழிக்கும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக விவசாய மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

120 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், விவசாயிகளின போராட்டத்தை களைத்த போலீசார், 54 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும், 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறைக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, 6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே விடப்பட்டனர்.

ஆனால், உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புக் காவல் மட்டும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்ட வழக்கைத் திரும்பப் பெறும் முடிவில் தமிழக அரசு இருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, அருள் ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புக் காவலை, தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், ரவுடிகள் மீது போடும் குண்டாஸ் வழக்கை அமைதியாக போராடும் விவசாயிகள் மீது போட்டதற்காக விவசாயிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள X தளப்பதிவில், “ரவுடிகள் மீது போடும் குண்டாஸ் வழக்கை அமைதியாக போராடும் விவசாயிகள் மீது போட்டு கைது செய்த குண்டாஸ் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் சொல்வதை அப்படியே நம்பி குண்டாஸ் வழக்குக்கு அனுமதி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இது போல பொறுப்பில்லாமல் குண்டாஸ் வழக்கை பயன்படுத்தி தங்கள் உரிமைகளுக்காக அமைதியாக போராடும் அப்பாவி மக்களை பழி வாங்க மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 186

0

0