ஆமாம் சரிதான்… வடக்கே கோபாலபுரம் வாழ்கிறது… தென்மாவட்டம் தேய்கிறது… திமுக எம்பி கனிமொழிக்கு அர்ஜுன் சம்பத் பதிலடி

Author: Babu Lakshmanan
16 February 2024, 8:59 am

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என கனிமொழி எம்பி ட்வீட் செய்துள்ளார் அது உண்மைதான் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு காரணம் அண்ணாமலையின் தேசிய அரசியலா ?.. திராவிடத்தின் ஊழல் அரசியலா ?.. என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- இந்து மக்கள் கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு காரணம் அண்ணாமலையின் தேசிய அரசியலா ?.. திராவிடத்தின் ஊழல் அரசியலா ?.. என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள டிஏ திருமண மண்டபத்தில் இன்று திட்டமிட்டபடி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த இடத்தில் நடத்துவதற்கு காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து திருமண மண்டபம் பூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, பூட்டப்பட்ட திருமண மண்டபத்தின் வாயில் கதவில் மாலை அணிவித்து மாநிலத் திமுக அரசை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பிவிட்டு, தொடர்ந்து இந்நிகழ்ச்சியானது தூத்துக்குடி டுவிபுரம் இரண்டாவது தெருவில் பாஜக பிரமுகர் இல்லத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது. இது போன்ற தடைகள் இனி தொடருமானால் நீதிமன்றம் மூலம் இந்து மக்கள் கட்சி தடைகளை வெற்றி கொள்ளும். நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எல்லா மக்களும் ஆதரவு தெரிவித்து விட்டனர். தேர்தல் சீர்திருத்தத்தின் முக்கியமான பகுதி. இதனால் தேர்தலில் முறைகேடுகள் குறையும், வளர்ச்சி திட்டங்கள் மக்களிடையே சென்றடையும், செலவு மிச்சமாகும்.

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் திமுக கட்சி உறுப்பினர் போன்று செயல்படுகிறார். அவருக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆளுநருக்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் 17ஆம் தேதி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. மீண்டும் மோடி வேண்டும் மோடி தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற திட்டமிடுதல் அங்கு நடைபெற இருக்கிறது. வரும் 18ம் தேதி திண்டுக்கல்லில் சனாதன எழுச்சி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு தலையிட வேண்டும். எல்லாவற்றிலும் தோல்வியடைந்து லஞ்சம் ஊழல் தலை விரித்து ஆடுகிறது.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என கனிமொழி எம்பி ட்வீட் செய்துள்ளார். அது உண்மைதான், வடக்கே கோபாலபுரம், சென்னை வாழ்கிறது. ஆனால் தென் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மழையும் வெள்ள காலங்களிலும் திமுக ஆட்சி மக்களை காப்பாற்றவில்லை. மாவட்டத்தை தனி மாநிலமாக பிரித்து, தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்.

தேச விரோத சக்திகளால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நீதிமன்றம் மூலம் மீண்டும் திறக்க நேரிட்டால் கலவரத்தை தூண்டுவதற்கு எதிர்ப்புக் குழு திட்டமிட்டுள்ளது, எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!