திமுக மத, பிண அரசியல் செய்யக்கூடாது… யார் பேச்சையும் கேட்க வேண்டாம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக : அண்ணாமலை வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
25 January 2022, 7:00 pm
Quick Share

சென்னை : திமுக மத, பிண அரசியல் செய்யக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை கிறிஸ்துவ பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி, மதமாற்ற நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போது, இறுதியாக தனக்கு நேர்ந்த கதியை அதில் வாக்குமூலமாக கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எச்.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உடனடியாக மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட முக்கிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- எந்தவொரு பள்ளிக்கும், மதத்திற்கும் எதிராக நாங்க போராட்டம் நடத்தவில்லை. மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவதே எனது முதல் பணி என்று மகாத்மா கூறியிருந்தார். கடந்த 8 மாதத்தில் நாங்கள் உணர்ந்தது திமுக மத சார்பற்ற அரசு கிடையாது. ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய 160க்கும் மேலான இந்துக் கோயில்களை திமுக அரசு இடித்து, மத அரசியல் மூலம் குளிர் காய்கிறது திமுக. மாணவர்கள் சாவு என்றாலே அரசியல் செய்வதற்கான வாய்ப்பு என தமிழகத்தில் கருதுகின்றனர்.

மாணவிக்காக போராடாவிட்டால் துரோகமாக மாறி விடும். பாஜக சார்பில் 4 கோரிக்கைகளை முன்வைக்கிறோம். இழப்பீடாக மாணவி குடும்பத்தாருக்கு 1 கோடி வழங்க வேண்டும். மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மதசார்பின்மையை கைவிட்டு ஒரு மதத்தை மட்டும் நம்பி செயல்படுகிறது திமுக. எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும். குடும்பத்தாருக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். உண்மையை பார்க்காதே , பேசாதே , கேட்காதே என திமுக அரசு நடந்து கொள்கிறது. திமுக மத, பிண அரசியல் செய்யக்கூடாது, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் இளநீர் குடித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

Views: - 1817

0

0