செந்தில் பாலாஜி கைதுக்கு ரிவேஞ்ச்-ஆ…? நள்ளிரவில் பாஜகவின் முக்கிய பிரமுகர் கைது ; கொந்தளிக்கும் தமிழக பாஜக!!

Author: Babu Lakshmanan
17 June 2023, 9:17 am
Quick Share

மதுரை ; தமிழக பாஜகவின் முக்கிய பிரமுகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக – திமுகவினரிடையே மோதல் எழுந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவினருக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்தார். நாங்க திருப்பி அடித்தால் நீங்க தாங்க மாட்டீங்க என்றும், இது மிரட்டல் இல்ல, எச்சரிக்கை என்றும் ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண்ணாடம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் என்பவர் தூய்மை பணியாளர் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கடந்த 7-ஆம் தேதி எஸ்.ஜி.சூர்யா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியும், விஸ்வநாதன் என்ற கவுன்சிலரும் கிடையாது என குறிப்பிட்டு, வதந்தி பரப்பி அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய வேண்டும் என கடந்த 12ம் தேதி மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் சார்பில், மதுரை காவல் ஆணையரிடம் புகாரளிக்கபட்டது.

இதைத் தொடர்ந்து, மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் எஸ்.ஜி.சூர்யாவை நேற்று நள்ளிரவில் சென்னை தியாகராய நகரில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இதனைக் கண்டித்து பாஜகவினர், எழும்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கு பழிவாங்கும் விதமாக எஸ்ஜி சூர்யா தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Views: - 422

0

0