தமிழகத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கே பாதுகாப்பு இல்லை : பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
8 March 2022, 8:03 pm
Quick Share

மதுரை : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழலில் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையே நிலவுவதாக பாஜக பிரமுகர் காயத்திரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக மதுரை மாநகர மகளிர் அணி சார்பில் மதுரை சோமசுந்தரம் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் பாஜக மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி மற்றும் கலை மற்றும் பண்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவி காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அவர்களுக்கு பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மருத்துவர் சரவணன் உற்சாக வரவேற்பு அளித்தார்.

பின்னர் கலை மற்றும் பண்பாட்டு பிரிவு மாநிலத் தலைவி காயத்ரி ரகுராம் பேசும்போது;- தமிழகத்தில் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பெருவாரியான இடங்களில் வெற்றி பெரும்.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதே இல்லை. தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே தெரிகிறது. மத்திய அரசு உக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சில ஊடகங்கள் இதில் திமுக அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது, எனக் கூறினார்.

Views: - 1137

0

0