‘பயந்தாங்கொள்ளி திமுக அமைச்சர் ஓடி ஒளிந்து கொண்டார்… இவ்வளவுதான் அவங்க தைரியம்’ ; ஆபாச பேச்சுக்கு குஷ்பு சூடான ரிப்ளை…!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 10:02 pm

சென்னை : திமுக பேச்சாளர் தன்னை ஆபாசமாக பேசியதற்கு பாஜக பிரமுகர் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை ஆர்கே நகரில் நடைபெற்ற திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வுக்கு நன்றி பாராட்டும் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் மேடையில் அமர்ந்திருந்த போது, திமுக நிர்வாகியான சைதை சாதிக் என்பவர் பாஜக குறித்தும், பாஜக மகளிர் நிர்வாகிகள் பற்றியும் தகாத வார்த்தைகளில் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தன்னைப் பற்றி திமுக பேச்சாளர் அவதூறாக பேசியது தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு, பாஜக பிரமுகர் குஷ்பு காட்டமாக பதில் அளித்துள்ளார். அதாவது, ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு இழிவாகப் பேசும் போது திமுக அமைச்சர் மேடையில் அமர்ந்து வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டு இருக்கிறார். கொச்சையாகப் பேசிய அந்தப் பேச்சாளரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் ;

அமைச்சர் மனோ தங்கராஜ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவர்களை போன்ற ஆட்களால்தான் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என நினைக்கிறார்கள் ; ஆனால், இதுபோன்ற நேரத்தில் நாம் தைரியமாகப் பதிலடி கொடுக்க வேண்டும். அந்த பயந்தாங்கொள்ளி அமைச்சர் தற்போது ஓடி ஒளிந்து கொண்டார் பாருங்கள்.. இவர்களின் தைரியம் இவ்வளவுதான், எனக் கூறினார்.

  • karnataka government secured for thug life movie release கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!