இதுகூட தெரியாதா..? நீங்க அமைச்சரா இருப்பதே கேவலம்.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு அண்ணாமலை பதிலடி…!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 5:12 pm
Quick Share

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஆவின் கொள்முதலை பாதிக்கும் விதமாக, பாலை நேரடியாக உற்பத்தியாளர்களிடமே குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த மே 25ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், ஆவின் நிறுவனத்தின் மூலம் தினசரி 4.5 லட்சம் உறுப்பினர்களிடம் இருந்து 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வது, பால் உற்பத்தியாளர்கள் பெறும் நன்மைகள், நுகர்வோர் பெறக்கூடிய பயன்கள் உள்ளிட்டவற்றையும் அந்தக் கடிதத்தில் விளக்கி இருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய இந்தக் கடிதம் குறித்து அண்மையில் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் பேசியிருந்தார். அமுல் கைரா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் குஜராத்தில் இருப்பதாகவும், நம்ம தலைவர் நேரா அமித் ஷா ஜிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார். மேலும், அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு தவறான கடிதத்தை யாருமே எழுதியிருக்க மாட்டார்கள் என்றும், நல்ல வேளை மோடிஜிக்கு எழுதவில்லை என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Annamalai STalin - Updatenews360

அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக பாஜகவிற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும்.

அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.

TRB Raja - Updatenews360

தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித் ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை. அண்ணாமலைக்கு பின்னால் நின்று சிரிக்கும் நபர்கள் கொஞ்சம் விழித்து கொண்டால் நன்றாக இருக்கும் எனப் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவால் கடுப்பாகி போன அண்ணாமலை, தந்தையின் செல்வாக்கில் அரசியல் செய்பவரும், திமுக தலைவரின் அல்லக்கையுமானவர்களுக்கு, மத்திய அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருவது குறித்து சொல்லித்தர வேண்டும். தேசிய பால்வள மேம்பாட்டு வாரியமானது, அமுல், நந்தினி, மில்மா போன்ற மாநில பால் நிறுவனங்களின் எல்லை கடந்த வணிகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டது. இந்த வாரியம், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

நீங்கள் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது, என தெரிவித்துள்ளார்.

Views: - 414

0

0