செந்தில் பாலாஜி கைது எல்லாம் சும்மா… அடுத்த அந்த அமைச்சருக்கு இருக்கு… திமுகவை அலறவிடும் அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 4:06 pm
Quick Share

திமுக யாத்திரை தொடங்கினால் என் மகன், என் பேத்தி என தான் தொடங்கியிருப்பார்கள் என்றும், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலம் , திமுக அரசின் 2 ஆண்டு ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும் வகையில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணமலை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமநாதபுரம் ,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடை பயணத்தை முடித்து நேற்று 8ஆவது நாளாக மதுரை மேலூரில் தொடங்கி சோழவந்தானில் முடித்தார். இதனை தொடர்ந்து, 9ஆம் நாளாக இன்று மதுர ஒத்தக்கடை நரசிங்கபெருமாள் கோவில் முன்பாக நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை, ஒத்தக்கடை உத்தங்குடி சாலை சந்திப்பு வரை நடை பயணம் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஒத்தக்கடை பகுதியில் அண்ணாமலை பேசியதாவது :- மதுரை கிழக்கு தொகுதியில் நடைபெறும் தவறுதான், அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே இல்லை, ட்ரான்ஸ்பருக்கு பணம் கேட்கிறார். விஞ்ஞான முறையில் பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் செய்கிறார். மூர்த்தி மகன் கல்யாணத்துக்கு செலவு செய்த தொகையில் சர்க்கரை ஆலையை செயல்படுத்திருக்கலாம் என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்.

செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான். மூர்த்தி அண்ணணுக்கு நடப்பதை மட்டும் பாருங்கள். நான் எதாவது சொல்லி நடந்து விட்டால் பிறகு அண்ணாமலை சொல்லித்தான் நடந்து விட்டது என்று என்பார்கள். சத்தியமாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. குலதெய்வம் மீது ஆணையாக எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை.

திமுக ஆட்சி தான் குடும்பம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நடக்கிறது. திமுக யாத்திரை தொடங்கியிருந்தால் என் மகன் என் பேரன் என்று தொடங்கியிருப்பார்கள். இந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அதனை அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.

மதுரைக்கு எய்ம்ஸ் மோடி அறிவித்திருக்கிறார். இந்தியாவில் உள்ள எய்ம்ஸ் க்கு மாறுபட்டது. வட இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் போல தென்னிந்தியாவிற்கான எய்ம்ஸாக மதுரை எய்ம்ஸ் இருக்கும். 2600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் 2026 ஆம் ஆண்டு மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் . 22 ஆயிரம் பேருக்கு மதுரை எய்ம்ஸ் மூலமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

திமுக 1967 ஆம் ஆண்டிலிருந்து 5 முறை ஆட்சியில் உள்ளபோதும் எய்ம்ஸ் பற்றி யோசிக்காதவர்கள். இப்போது எய்ம்ஸ் சரியில்லை என வாய்சவடால் பேசுகின்றனர். திமுக குடும்பத்தினர் 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி கொள்ளை என அமைச்சர் பிடிஆர் கூறினார். அதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கலாமே, என்றார்.

100 கோடி ரூபாய்க்கு கலைஞர் நூலகம், பேனா சிலை என செலவு செய்யும் திமுக அரசு, ஆனால் கரும்பு ஆலை திறக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் 3 லட்சத்தி 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றார்கள். ஆனால் குருப் 4 தேர்வு முடிந்து 13 மாதம் ஆகிறது. அதன் முடிவை கூட வெளியிட முடியவில்லை. 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பணி தான் கொடுத்துள்ளீர்கள்.

2023 ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக மோடி கூறிய நிலையில், 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவிட்டார். மதுரை நெசவாளர்கள் அதிகமாக உள்ள பகுதி. ஆனால் பள்ளிச்சீருடை தைப்பதற்கான அனுமதி கூட அளிக்கவில்லை. விருதுநகரில் 500 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் திமுக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. தனது குடும்பத்திற்காக ஆட்சி நடக்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் 1500 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆனால், சென்னையில் செவிலியர்கள் பணி வேண்டி போராடுகிறார்கள். அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை. ஆனால் சென்னையில் பணிக்காக போராடி வருகின்றனர். வெறும் அறிக்கை தான் திராவிட மாடல் ஆட்சி.

கமிசன், கலெக்சன், கரெப்சன் என்பது தான் திமுக ஆட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் காவிரி நீர் குறித்தும் பேசுவதில்லை. கேரளா கழிவுகள் கொட்டுவது குறித்தும் பேசுவதில்லை. மோடியை பற்றி மட்டுமே பேசுகிறார். கம்யூனிஸ்ட்கள் சந்தர்ப்பவாதிகள். மதுரைக்கு பாஜக சார்பில் எம்பி வேண்டும். தமிழக மக்கள் மோடியை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 40க்கு 40 என்ற நம்பிக்கை உள்ளது. மதுரையில் தேஜக கூட்டணி எம்பி வேண்டும், என்றார்.

இதனை தொடர்ந்து, மதுரை ஆத்திக்குளம் பகுதியில் தொடங்கி கிருஷ்ணாபுரம் காலனி பகுதி வரை நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலையிடம் இஸ்லாமியர் சமாதானத்தை வெளிப்படுத்தும் வகையில், வெள்ளை புறாக்களையும், லவ் பேர்ட்ஸ்களையும் வழங்கி பறக்கவிட வைத்தனர். இதனையடுத்து, பைப் மூலமாக அண்ணாமலைக்கு பன்னீர் தெளிக்கப்பட்டது.

Views: - 252

0

0