‘சிலப்பதிகாரம் இருக்கட்டும்… முதல்ல பெரியாரைப் படியுங்க’ ; திமுக எம்பி கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!!

Author: Babu Lakshmanan
12 August 2023, 9:20 pm

நாடாளுமன்றத்தில் சிலப்பதிகாரம் குறித்து பேசிய திமுக எம்பி கனிமொழிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ‘சிலப்பதிகாரத்தை பிரதமர் மோடி படித்து, கண்ணகியின் கோபத்தால் எப்படி பாண்டிய மன்னனின் செங்கோல் வளைந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்,’ எனக் கூறியிருந்தார்.

கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது :- சகோதரி கனிமொழி கருணாநிதி அவர்கள் முதலில் பெரியாரைப் பற்றி படிக்க வேண்டும். பெரியார் சிலப்பதிகாரத்தை குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 1951ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சேலத்தில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோவம் கொண்ட கண்ணகி ஒரு பக்கத்துக் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம், அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரிக்கிறதாம், இதை நம்ப முடிகிறதா? பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன செய்வார்கள், இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா?” என்று கூறினார்.

ஆகவே, பிரதமர் மோடி அவர்களை சிலப்பதிகாரம் படிக்க சொல்ல வேண்டாம். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று முதலில் நீங்கள் படியுங்கள், என தெரிவித்துள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?