இதுல ஆச்சரியப்பட ஒன்றுமில்லை… வெட்டியாக இருக்கும் அமைச்சர் பிடிஆர்… அண்ணாமலை பதிலடி…!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 4:21 pm
Quick Share

இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவித்த விவகாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் விமர்சனத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

2026ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியமைந்தால் தகுதியான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம் என்றும், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியிருப்பதாக விமர்சனம் செய்தார்.

அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகக் குடும்பங்களில் இதுவரை அரசு வேலை கிடைக்காத குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று நான் கூறியதை திமுகவின் குடும்பத் தொலைக்காட்சி திரித்துச் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்.

ஆனால், ஒரு மாநிலத்தின் அமைச்சர், வேலையில்லாமல் எவ்வளவு தூரம் வெட்டியாக இருக்கிறார் என்பது, திமுகவின் குடும்பத் தொலைக்காட்சியில் வந்த பொய்யான செய்திக்கும் கருத்து சொல்லிக் கொண்டிருப்பதில் இருந்து தெரிகிறது. அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுத ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் முப்பது லட்சம்தான் என்பது மனிதவளத் துறையின் அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே.

30 லட்ச விண்ணப்பதாரர்களில், அரசுப் பணி பெறாத குடும்பத்தாரை கண்டறிந்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது சுமையாக நீங்கள் கருதலாம். ஆனால் அதுதான் உண்மையான சமூகநீதி. இதை பாஜக செய்யும். திமுகவை போல் 3.5 லட்ச காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றமாட்டோம்.

முதலில், அரசுப் பணிக்கான தேர்வுகள் எழுதி, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, தேர்வு முடிவுகளோ, நேர்முகத் தேர்வுக்கான அழைப்போ, பணி நியமனமோ, செய்யாமல் இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையத்தின் தூக்கத்தைத் தட்டி எழுப்பும் பணியை திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் செய்யட்டும். அதற்கு முன்பாக, இரண்டு ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருக்கும் தேர்வாணையத் தலைவர் பொறுப்புக்கும் உறுப்பினர் பொறுப்புக்கும் தகுதியானவர்களை நியமிக்கட்டும். திமுகவின் போலிச் செய்திகளுக்கும், பொய் புனைதலுக்கும் கருத்து பிறகு சொல்லிக் கொள்ளலாம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 186

0

0