நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா…? அதுவும் இந்தத் தொகுதியிலா..? அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 9:23 am
annamalai---bjp---updatenews360
Quick Share

ஆர்எஸ் பாரதியின் வாக்குமூலம் அளித்ததை பார்த்தாலே, அவர்கள் பயப்படவில்லை என்று சொல்ல முடியுமா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நடந்த என் மண் என் மக்கள் நடை பயணத்திற்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், நேற்று நீங்கள் எம்பி கதிர் ஆனந்த் வீட்டின் கதவை அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் தட்ட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருந்தீர்கள். அதற்கு அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு கதவை தட்டும் கஷ்டம் வேண்டாம். நாங்களே திறந்து வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினர்.

அந்தக் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- நான் அப்படி சொல்லவில்லையே. நான் அமலாக்கத்துறை என்ற வார்த்தையை பயன்படுத்தினேனா…? எம்பி கதிர் ஆனந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினேனா..? யாரெல்லாம் மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் கதவை அரசு தட்ட தான் போகிறது. நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என்ற எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். சேர்ந்து வரலாம். தனித்தனியாக வரலாம். நாளைக்கு வரலாம், அடுத்த வாரம் வரலாம். இப்படியாக நான் யூகிக்க முடியும்,” என்றார்.

கோயம்புத்தூரில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது என நிருபர் கேட்டதற்கு,”பாஜக மாநில தலைவர் கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார் என்றால் ஏன் வேலூரில் போட்டுயிடக்கூடாது. என்னை முதலில் கட்சி போட்டியிடுங்கள் என்று சொன்னால் அதை கேட்பது என்னுடைய கடமை. கோயம்புத்தூர் மற்றும் வேறு ஊரில் போட்டியிடுகிறேன் என்று சொல்ல வேண்டாம். கட்சி போட்டியிடுங்கள் என்று சொன்னால் கட்டாயம் உங்களிடம் சொல்லுவேன். வேலூரை விட்டு என்னை வெளியே அனுப்பி விடாதீர்கள். நானும் வேலூர் காரன் தான்,” என்றார்.

அமலாக்கத்துறையை வைத்து எம்எல்ஏ, எம்பிக்களை மிரட்டியதை தொடர்ந்து முதலமைச்சரையே கைது செய்திருக்கிறார்கள் என்று திமுக எம்பி ராசா கூறியுள்ளார் என கேட்டதற்கு,”ஹேமந்த் பொருத்தவரை ஏழு சம்மனுக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு சென்றபோது தப்பி சென்று விட்டார். கைதாவார் என்று தெரிந்து இரண்டு மாதத்திற்கு முன்பே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார். அந்த இடத்திற்கு மனைவியை போட்டியிட வைக்க வேண்டும் என்று ஹேமந்த் சூரனை பொறுத்தவரை நீதிமன்றம் 5 நாள் காவல் கொடுத்துள்ளது. வழக்கில் நியாயம் இருப்பதால்தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது,”என்றார்.

ஆர்எஸ் பாரதி காமெடி செய்வது போல அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்வார். 2021ல் கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் வேறு. திமுகவின் உடைய மூத்த தலைவர் துரைமுருகன் வேறு. நம்பியார் படத்தில், மரு வைத்திருந்தால் வில்லன், மரு வைக்காவிட்டால் ஹீரோ என்று. அதுபோல தவறு செய்து சிக்கிக்கொண்ட போது நீதிமன்றத்தில் ஆர்எஸ் பாரதி இரு துறைமுருகனும் வேறு வேறு என்று தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்து வாக்குமூலம் (affidavit) அளித்தார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பயப்படவில்லை என்று சொல்ல முடியுமா..? பயப்படாவிட்டால் எதற்காக ஆர்எஸ் பாரதி 2021ல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் ( affidavit) தெரிவித்தார். உப்பு சாப்பிட்டவங்க தண்ணி குடித்துதான் ஆகவேண்டும்,”என்றார்.

சீமான் முதலில் அவரது கட்சியை காப்பாற்றும் வேலையை முதலில் பார்க்க வேண்டும். தேசத்திற்கு எதிரானவர்கள் என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடக்கிறது. சீமானின் கட்சி வேகமாக கலைந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை வம்புக்கு இழுத்தால் புதிய இமேஜ் கிடைக்கும் என்பது தமிழகத்தில் புது ஸ்டைலாக உள்ளது. எப்போதும் சீமானின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் மனிதன் நான். தமிழ்நாட்டை எங்கே கொண்டு செல்ல வேண்டும் என்பதில் எனக்கென ஒரு இலக்கு உள்ளது,கனவு உள்ளது. நாங்கள் பிரிவினை வாதத்தை பேசக்கூடியவர்கள் அல்ல.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஓனராக நான் இருந்தால் 11 பேரையும் தமிழ்நாட்டுக்காரன்களை தான் விளையாட வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அந்த அளவுக்கு தகுதி உடையவர்களாக உருவாக்குவேன் என்று சொல்லுவேன். தமிழகத்தில் இருக்கக்கூடியவர்களை இந்தியா முழுவதும் உள்ள ஐபிஎல் டீமில் விளையாட வைப்பேன் என்று சொல்லுவேன் என்று தவிர, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சீமான் சொல்வது போல சென்னை சூப்பர் கிங்ஸில் 11 பேர் இவர்கள் தான் விளையாடுவார்கள் என்று சொல்ல மாட்டேன். காரணத்தோடு பேசுபவன் நான். எனக்கும் சீமானுக்கும் நிறைய வேறுபாடுகள் வித்தியாசங்கள் உள்ளது. என்னுடைய அரசியல் பாதையில் அவருடைய அரசியல் பாதையில் முற்றிலும் வேறு. அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த சித்தாந்தம் மக்களுக்கு வேண்டும் என அவர்களே முடிவெடுக்கட்டும்,” என்றார்.

தமிழகம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதாக நீங்கள் தெரிவித்ததற்கு, அண்ணாமலை என்ன பொருளாதாரம் நிபுணரா என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாரே என கேட்டதற்கு,” லக்னோவில், எம்பிஏ ஃபினான்ஸ் படித்துள்ளேன். 10 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 99.4 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன். கொஞ்சம் ஃபினான்ஸ் தெரியும். அமைச்சர் துரைமுருகனுக்கு தெரிந்ததை விட எனக்கு ரொம்ப அதிகமாக பினான்ஸ் தெரியும். எனக்கு ஒரு ஸ்டேட்மெண்டை படிக்க தெரியும். பட்ஜெட் டாக்குமெண்டை படிக்க தெரியும். மாநிலம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரியும். அமைச்சர் துரைமுருகன் வேண்டுமானால் படிக்காமல் இருக்கலாம். அந்த கதையை என்கிட்ட ஓட்ட வேண்டாம்,” என்றார்.

Views: - 209

0

0