கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பட்டியலின மக்கள்தான் காரணமா..? இதுதான் திமுக அரசின் புத்தி… அண்ணாமலை காட்டம்!!

Author: Babu Lakshmanan
26 July 2022, 1:47 pm
Quick Share

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பட்டியலின மக்கள்தான் காரணம் என்று தமிழக உளவுத்துறை கூறுவதாகவும், இது திமுகவின் வஞ்சிக்கு செயல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கடந்த 13ம் தேதி தனியார் பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை தொடர்ந்து, மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில், மாணவி பயின்ற பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால், கள்ளக்குறிச்சியில் பதற்றம் நிலவியது.

கலவரம் தொடர்பாக உளவுத்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும்..? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேவேளையில், இந்த கலவரத்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அழிக்கப்பட்டு விட்டதாகவும், இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர்.

தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும், உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது?

இதில், சில கட்சிகள் சமூக நீதியை பின்னுக்குத் தள்ளி, அரசுக்கு அளித்த ரகசியத் தகவலை ஊடகத்திற்குக் கசிய விட்டதை முதன்மை குற்றச்சாட்டாக வைத்துள்ளனர். தமிழக உளவுத்துறையின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே.

மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல. இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ்சிப்பதும் புதிதல்ல. மீண்டும் ஒரு முறை ஒரு திறனற்ற அரசின் எடுத்துக்காட்டாக திமுக அரசு விளங்கியுள்ளது,” என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுகவுக்கு, கள்ளக்குறிச்சி கலவரம் அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 492

0

0