அமைச்சர் செந்தில்பாலாஜியின் பதவிக்கு வேட்டு..? நாளை மறுதினம் நடக்கப்போகும் சம்பவம்… அண்ணாமலை சொன்ன தகவல்..!!

Author: Babu Lakshmanan
19 May 2023, 12:55 pm
Senthil Balaji Vs Annamalai - Updatenews360
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,பாஜக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் வி.எல் சந்தோஷ் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா,மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா உட்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து நாளை நடைபெறும் மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கொண்டாடுவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்துவிட்டு, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதை வருகின்ற மே 30 ம் தேதி முதல் ஜீன் 30 ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பாஜக கொண்டாட உள்ளது. பிரதமரின் சாதனைகள், அதனால் தமிழகத்திற்கு கிடைத்த பயன்கள், மக்கள் எப்படி முன்னேறி உள்ளார்கள், அரசின் திட்டங்கள் பட்டி தொட்டி எல்லாம் எவ்வாறு சென்றுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒரு மாத காலம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.

பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்துள்ளனர். நானும் எனது காளையை கொண்டு வந்துள்ளேன். அதற்கு காரணம் நேற்று உச்சநீதிமன்றம் சரித்திரம் வாய்ந்த தீர்ப்பை பிரதமர் மோடியின் முழு முயற்சியால் வழங்கியுள்ளது. எனவே அதனைக் கொண்டாடவே ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் நாளை மாவட்ட தலைநகரங்களில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கள்ளச்சாரயம் பட்டிதொட்டி எங்கும் புழங்க ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் விழுப்புரம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் மாநில அரசிற்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாரயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வருகின்ற 21ம் தேதியன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து, கள்ளச்சாரயத்திற்கு ஆளுநர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜக குழுவினர் மனு அளிக்க உள்ளோம். டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடக்கூடிய மதுவிற்கும், கள்ளச்சாராயத்திற்கும் ஆளுநர் முற்றுபுள்ளி வைக்க மனு அளிக்க உள்ளோம். மேலும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும். அவரை நீக்க கோரி முதலமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளோம்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது முடியாது. அவரை நீக்க ஆளுநர் முதலமைச்சருக்கு வலியுறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடும் குதிரை போல எல்லா பக்கமும் மது ஓடிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு தமிழகத்தை குடிகார மாநிலமாக்குவதை கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கை கட்டுப்படுத்தினால், கள்ளச்சாரயம் கட்டுப்படுத்தப்படும், என தெரிவித்தார்.

Views: - 336

0

0