எந்த காலத்திலும் கட்சி வளராது.. என் உயிருக்கே ஆபத்து ; அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்.. பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 3:50 pm
Quick Share

பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பொறுப்புகளை வழங்குவதாக மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய பாஜகவின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேவேளையில், உட்கட்சி பூசலும் நாளுக்கு நாள் வெடித்து வருகிறது. தமிழக பாஜக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் காயத்ரி ரகுராம் விலகியதை அடுத்து, ஐடி விங்க் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், கட்சியின் ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

இதேபோல, சில மாநில நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகி வந்த நிலையில், தற்போது மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ணன் பிரபு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை என்று குற்றம்சாட்டிய அவர், பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் எந்த காலத்திலும் தமிழகத்தில் பாஜக வளராது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது :- மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும் கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.

அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும் மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும், மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும், மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் விதமான அரசியல்களை நடத்தி கொண்டிருக்கிறீர்கள். எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக எங்களை வற்புறுத்தி சில விஷயங்களையும், கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும் என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த நிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்கள் ஆளாகிய எந்த ஒரு கட்சி வேலையில் செயல்பட விடாமல் செய்தனர்.

மேலும் ஆருத்ரா போன்ற மோசடி ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்து விட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளையும் நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பிரச்சினைகளை சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளரும் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

இதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள்தான். நீங்கள் சரி பட செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன். பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என ஊர்ஜிதமான உண்மை இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Views: - 240

0

0