நாக்கை அடக்கி பேசுங்க… வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி : சர்ச்சை பேச்சால் பாஜக காட்டம்..!!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 10:17 am
Quick Share

திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் திமுக எம்பியும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார். நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நடந்தது என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்ததாகவும், நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவியை அனுப்பிவிட்டார்கள் என்றும், அப்போது உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என ஆவேசமாக பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஆளுநர் ஆர்என் ரவி, நாகாலாந்து மக்களை பகிரங்கமாக இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது என கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆர்எஸ் பாரதிக்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய
ஆர்எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை ஆணாய் பிறந்து வீணாய் போனவன் என்று பேசுவதா? நாக்கை அடக்கி பேச வேண்டும் ஆர் எஸ் பாரதி.

பிரதமரும், எங்களின் தலைவருமான நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து பேசுவது பண்பாடாகாது என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆர்.எஸ். பாரதிக்கு எடுத்துரைக்க வேண்டும். ஒரு வினைக்கு எதிர்வினையாற்ற ஒரு நொடி போதாது. ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம். இனியும் அநாகரீகமாக எங்கள் தலைவர்கள் குறித்து பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

நாகரீகமான, பண்பாட்டு அரசியலை பின்பற்றுவது தான் வாக்களித்த மக்களுக்கு நீங்கள் ஆற்றும் கடமை. அதை விடுத்து, மலிவு அரசியலை முன்னெடுத்து, தரக்குறைவான பேச்சுகளை மக்கள் மத்தியில் பேசுவது முறையற்றது என்பது ஆர் எஸ் பாரதி போன்ற மூன்றாம் தர பேச்சாளர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், பொறுப்பான தமிழக முதலமைச்சர் பொறுப்பில் உள்ள முதலமைச்சர் அவர்களுக்கு புரியுமா என்பதே புதிர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட முதலமைச்சர் கண்ணியத்தை கடைபிடிக்க தன் கட்சியினருக்கு அறிவுறுத்துவாரா அல்லது பதவிக்காக, ஆட்சி அதிகாரத்திற்கான அராஜக, அநாகரீக போக்கை திமுகவினர் தொடர அனுமதிப்பாரா? அதிகாரம் நிலையானது அல்ல என்பதை முதல்வர் உணர்வாரா?, என தெரிவித்துள்ளார்.

Views: - 248

0

0