டெல்லியில் இருந்து இபிஎஸ்-க்கு வந்த அழைப்பு… வெயிட்டிங் லிஸ்ட்டில் ஓபிஎஸ்… கை கழுவியதா பாஜக..,?

Author: Babu Lakshmanan
11 July 2023, 4:36 pm
Quick Share

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளருக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இதில், அதிமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக – அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணியில் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு காணப்பட்டு வருகிறது. இதனால், கூட்டணி நீடிக்குமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுவும், கூட்டணியை மறு பரிசீலனை செய்யவும் தயார் என அதிமுக தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு டெல்லியில் வரும் 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு பங்கேற்பதாக அறிவித்துள்ளார். அதே போல ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லையென கூறிவிட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அதிமுகவிற்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமகவின் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜிகே வாசன் என பிற கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாஜக தலைமை அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் – இபிஎஸ்-ஐ இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பாஜகவின் இந்த செயல் பெரிதும் கவனிக்கப்படுவதாக உள்ளது.

ஏற்கனவே பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் சார்பாக கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Views: - 284

0

0