ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி… பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் அனுமதி… அதிமுகவுக்கு தலைமை ஏற்கிறார் இபிஎஸ்..?

Author: Babu Lakshmanan
11 July 2022, 9:28 am
Quick Share

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்று (ஜுலை 11) நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், அடுத்த பொதுக்குழு குறித்த அவரது அறிவிப்பும் நீதிமன்ற அவமதிப்பு என பன்னீர்செல்வம் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

கடந்த வாரம் இந்த மனு மீதான விசாரணையின் போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும்..? எனவே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்க முடியாது, என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்று, நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதனிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் சரமாரியான வாதங்களை முன்வைத்தனர். இதனைக் கேட்ட நீதிமன்றம், ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும் என்றும், உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எல்லை மீறி நடந்து கொண்டது, எனக் கூறியது.

மேலும், வரும் 11ம் தேதி நடக்கும் அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தை நாடலாம், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விவகாத்தின் போது, ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் மாறிமாறி வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, 11ம் தேதி அதாவது, இன்று பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

அதன்படி, காலை சரியாக 9 மணியளவில் நீதிபதி தீர்ப்பை வெளியிட்டார். அதில், அதிமுக பொதுக்குழுவை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்தார். மேலும், உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம்,விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை அறிந்த உடன், வானகரத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்து கோஷம் எழுப்பினர். ஏற்கனவே, உச்சநீதிமன்றம் ஓபிஎஸ்-க்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்மறையாக இருப்பது அவருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 425

0

0