முழு பயன்பாட்டிற்கு வந்தது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. எந்தெந்த நடைமேடைகளில் எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
30 January 2024, 11:19 am
Quick Share

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த நிலையில், TNSTC பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 400 – கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. முதல் கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் SETC பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. அதன் பிறகு ஆம்னி பேருந்துகளின் இயக்கம் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் இன்று முதல் TNSTC பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது TNSTC பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 710 போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இங்கிருந்து திருச்சி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, செஞ்சி, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகளுக்காக இயக்கப்படுகின்றன.

SETC, TNSTC, ஆம்னி என அனைத்து பேருந்துகளின் சேவையும் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி மாநகர பேருந்துகள் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.

நடைமேடை 1 மற்றும் 2ல் – கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர், சிவகாசி, செங்கோட்டை, குட்டம், குலசேகரம், திசைாயன்விளை, உடன்குடி, கருங்கல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

நடைமேடை 3ல் – ராமேஸ்வரம், சிவகங்கை, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, ஏர்வாடி, ஒப்பிலான், கமுதி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும்.

நடைமேடை 4 மற்றும் 5ல் – திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், அரியலூர், ஒரத்தநாடு, கரூர், திண்டுக்கல், குமுளி, கம்பம்

நடைமேடை 6ல் – ஈரோடு, கோவை, சேலம், ஊட்டி, குருவாயூர், எர்ணாகுளம், கரூர், திருப்பூர்

நடைமேடை 7ல் – திருவண்ணாமலை, செஞ்சி, செங்கம்

நடைமேடை 8ல் – அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலூர்

நடைமேடை 9ல் – கடலூர், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டு மொத்த விற்பனை மட்டுமே நடைபெற்று வருவதாக விற்பனையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Views: - 191

0

0