சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் ; பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்..!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 10:52 am
Quick Share

சென்னை : சென்னையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த 31ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தில் இந்து அமைப்புகள், பாஜக மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளில் 1,352 சிலைகள் பிரமாண்டமானவை ஆகும். இதில் சிறிய வகை சிலைகள் நீர்நிலைகளில் தொடர்ந்து கரைக்கப்பட்டு வருகின்றன. பெரிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று நடக்கிறது. இதற்காக, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க வசதியாக ‘டிராலி’ அமைக்கப்பட்டதோடு, பிரமாண்ட சிலைகளை தூக்கிச்சென்று கரைப்பதற்காக ராட்சத கிரேனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. . காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில், படகில் எடுத்து சென்று சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலரத்தை முன்னிட்டு சென்னையில் முக்கிய பகுதிகிளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு விநாயகர் சிலையும் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் 15 ஆயிரம் போலீசாரும், 2 ஆயிரம் ஊர்க்காவல்படை வீரர்களும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். கடற்கரை பகுதியில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். எச்சரிக்கை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.

Views: - 371

0

0