‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே’… விஜயகாந்துக்கு பிரியா விடை கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
29 December 2023, 8:02 pm
Quick Share

சென்னை ; தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு போட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது.

இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் உடலுக்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சுந்தர்.சி, பாக்கியராஜ், சாந்தனு மற்றும் நடிகை குஷ்பூ, நளினி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பல பிரபலங்கள் சமூகவலைதளங்களில் இரங்கலை தெரிவித்திருந்தனர்.

பின்னர், நல்லடக்கம் செய்வதற்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுகிலும் இருபக்கங்களிலும் தொண்டர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

3 நேரத்திற்கு பிறகு தேமுதிக அலுவலகம் வந்த விஜயகாந்தின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், குடும்பத்தினரும், உறவினகளும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், 24 குண்டுகள் என 3 சுற்றுகளாக மொத்தம் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, குடும்பத்தினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீருடன், விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு போட்டுள்ளார். அதாவது, ‘எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே’…எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 302

0

0