புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 10:48 am

சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப்பின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டுவில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர் விஷ்ணு என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.

ஸ்டாலின் ஜேக்கப் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப், ‘What A Karvad’ எனும் பிரபல ஆன்லைன் உணவு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்துள்ளார். ஸ்டாலின் ஜேக்கப்பின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்து கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற தம்பி ஸ்டாலின் ஜேகப் அவர்களின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை, அதற்குள் இத்தகு துயரச் செய்தி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த இரங்கல் பதிவில், “கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர், கொள்கை உறுதியோடு சமூக வலைத்தளங்களில் களமாடிய தம்பி‌ ஸ்டாலின் ஜேக்கப்-ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரிழப்பு. குடும்பத்தினர்& சமூகவலைத்தள உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதல்.உன் உழைப்பை என்றும் மறவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்