யாருக்காக காத்துக்கிடக்கும் மேம்பாலங்கள்…? கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத அவலம்.. போக்குவரத்து நெரிசலால் அல்லல்படும் கோவை மக்கள்…!!

Author: Babu Lakshmanan
19 May 2022, 8:59 pm

கோவை : கோவையில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள 2 பாலங்கள் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலையான திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியில் 253 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மின்விளக்கு பொருத்துவது, பக்க சாலை, வர்ணம் பூசுவது என அனைத்து பணிகளும் கடந்த மாதமே முடிவடைந்து விட்டது. ஆனால் பாலம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதன் காரணமாக சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதேபோன்று மேட்டுப்பாளையம் சாலையில் அறுபத்தி ஆறு கோடி ரூபாய் மதிப்பில் கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நான்கு வழிப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. சில நாட்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டிருந்த இந்த பாலம், அதன் பின்னர் மீண்டும் மூடப்பட்டுவிட்டது. இவ்விரு பாலங்களும் தமிழக முதல்வர் கோவை வரும்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று முதல்வர் வந்திருப்பதோடு அரசின் நிகழ்ச்சி ஒன்றிலும், தொழில்முனைவோர் சந்திப்பிலும் பங்கேற்றுள்ளார். ஆனால் பாலங்கள் திறப்பு குறித்து தகவல் ஏதும் இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் பல்வேறு திட்டங்களையும் காணொளி வாயிலாகவே முதல்வர் துவக்கி வைக்கும் நிலையில், நேரில் வந்தும் இந்த பாலங்கள் திறக்காமல் இருப்பது மாநகர மக்களிடம் கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாலங்களை விரைவாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?