கோவை கார் வெடிப்பு சம்பவம்… களமிறங்கிய என்ஐஏ ; தமிழக அரசுக்கு பாஜக கொடுக்கும் அழுத்தம்..!!

Author: Babu Lakshmanan
26 October 2022, 12:23 pm
Quick Share

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் பலியானார். தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் நடந்த இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைப்பற்றப்பட்டன. இதனால், சதி செயலுக்காக முயன்றாரா..? என்ற சந்தேகம் வழுத்துள்ளது.

இந்நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா(25 ), முகமது அசாருதீன்(23), ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ்(27), ஃபிரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26) உள்ளிட்ட ஐந்து நபர்களை உபா சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களின் சிலரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர். என்ஐஏவின் சந்தேக வளையத்திற்கு அவர்கள் இருந்து வரும் நிலையில், கோவையில் தற்போது கார் வெடிவிபத்து அரங்கேறியுள்ளது.

இந்த கார் வெடித்த விபத்தில் தமிழக அரசும், போலீசாரும் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக உக்கடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை விசாரித்து வரும் நிலையில், கார் வெடித்தது குறித்த தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்,

இதனிடையே, வின்சென்ட் சாலையில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் ஜமேசா முபினின் பெரியப்பா மகன் அப்சர்கான் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்சர்கானின் லேப்டாப், அவருடைய கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.

Views: - 325

0

0