பாஜக 9 தொகுதிகளை குறிவைக்கிறது இருக்கட்டும்… டெபாசிட்டாவது வாங்குமா..? அண்ணாமலை பேச்சுக்கு கேஎஸ் அழகிரி கிண்டல்…!!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 2:14 pm
Quick Share

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் கேஎஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

அண்மையில் நடந்த பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,
தமிழக பாஜக 9 தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி இருப்பதாகவும், அந்த 9 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். அதேபோல, இந்த முறை தமிழகத்தில் இருந்து 9 எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வது உறுதி என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இவர்களின் இந்தப் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது :- இருந்த கூட்டணியையும் முறித்துவிட்டு இப்படி நடுத்தெருவில் நிற்கிறோமே என்று சொந்த கட்சிக்காரர்களே புலம்பி வருகிறார். கூட்டணியில் இருக்கும் போதே தமிழகத்தில் பாஜகவால் சாதிக்க முடியவில்லை.

இப்போது தனித்து நின்று 9 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று கூறுவது நகைச்சுவை தான். ஜெயிப்பது இருக்கட்டும். முதலில் 9 தொகுதிகளிலாவது டெபாசிட்டை வாங்க முடியுமா..? என்பதை பாஜக யோசிக்க வேண்டும்.

மத்தியில் மோடி மக்களை ஏமாற்றுவது போல் தமிழகத்தில் அண்ணாமலையும் ஏமாற்றுகிறார். ஆளே இல்லாத கடைக்கு டீ போடுவது ஏன்..? இல்லாத கட்சிக்கு 9 இடங்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார், தேர்தல் வரை இப்படியாவது ஆறுதல் தேடிக் கொள்ளட்டும், எனக் கூறினார்.

Views: - 252

0

0